திருமுருகன் பூண்டி
பாடல் பெற்ற தலங்கள்-2
திருமுருகன் பூண்டி
கொங்கு ஏழு தலங்கள் என்பது கொங்கு மண்டலத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற ஏழு சிவாலயங்களைக் குறிக்கும்.
கொங்கு ஏழு தலங்களில் இரண்டாவதாக வணங்கப்படும் திருக்கோயில் திருமுருகன் பூண்டி முருகநாதர் ஆலயம்.
இத்திருக்கோயில் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வரும் தொன்மைச் சிறப்பு கொண்டது.
வாருங்கள் தரிசிப்போம்! இறையருள் பெறுவோம்!
புராணச் சிறப்பு
கடும் தவம் புரிந்து சாதுரியமாக
இறைவனிடம் சாகா வரம் பெற்ற
அசுரன் சூரபத்மனைப் போரில்
வென்று சூரசம்ஹாரம் செய்ததால் முருகப்பெருமானுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
கடுமையானது எனக் கருதப்படும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற
முருகப்பெருமான் சூரசம்ஹாரம் நிகழ்த்திய திருச்செந்தூரிலிருந்து நேராக இத்திருக்கோயிலுக்கு வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது.
முருகன் சிவபெருமானை வழிபாடு செய்த திருத்தலம் என்பதால் இக்கோயிலில் உறைந்து அருள் பாலிக்கும் சிவபிரான்
முருக நாதேஸ்வரர், முருகநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
'கந்தபுரிப் பட்டினம்' என்ற பழம் பெயரும் இவ்வூருக்கு உண்டு.
இத்திருத்தலத்தில் முருகன் பிரதிஷ்டை செய்து வணங்கிய இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன.
ஒன்று மூலஸ்தானத்தில் உள்ளது. மற்றொன்று முருகன் சன்னதியில் உள்ளது.
சுந்தரர் தேவாரம்
மலையாள தேசத்தில் கொடுங்களூரில் வாழ்ந்து வந்த பெரும் புலவரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருட்களுடன் திருமுருகன் பூண்டி பக்கம் வந்து கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி நாயனார் .
சுந்தரர் தேச சஞ்சாரத்தின் போது செல்லும் திருத்தலங்களில் பத்துப் பாடல்களாக ஒரு பதிகத்தை இனிய தமிழில் இறைவனைப் புகழ்ந்து பாடுவது வழக்கம்.
சுந்தரமூர்த்தி நாயனார் என்றாலே சிவபெருமானுக்குப் பிரியம் கொஞ்சம் அதிகம். அதனால் அவருடன் வித்தியாசமாக அலாதி ஆர்வத்துடன் திருவிளையாடல் புரிவார்.
இந்த முறையும் சுந்தரமூர்த்தியாருடன் விளையாட நினைத்தார் ஆடல் நாயகர்.
சுந்தரர் பெற்று வந்த பரிசில் பொருட்களைத் தன் பூதகணங்களை வழிப்பறிக் கொள்ளையர்கள் வேடத்தில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்து விட்டார்.
இரவு நேரம் ஆகிவிட்டதால் அருகிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கி அடுத்து செய்வதறியாது கவலை கொண்டார் சுந்தரர்.
சுந்தரரின் புலம்பலைப் போக்க நினைத்த பிள்ளையார் சிவன் குடி கொண்டிருக்கும் இடத்தைக் கைகாட்டி குறிப்பால் உணர்த்தினார்.
அத்திசையில் விரைந்து போன சுந்தரர், அங்கிருந்த கோயிலைக் கண்டு கோயிலில் உறைந்திருக்கும் சிவனாரைப் பார்த்ததும் கோபமுற்று
"இது நியாயமா....? வழிப்பறித் திருடர்கள் பயம் இருக்கும் இந்த ஊரில் பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள்" என்று பதிகம் பாடலானார்.
எப்போதும் புகழ்ந்து பாடும் சுந்தரனார் அப்போது இறைவனை நிந்தித்துப் பாடினார். ஆயினும் அதைக் கேட்டும் கோபப்படாத ஈசன் அப்பாடல்களை ரசித்துக் கேட்டு விட்டு பூதகணங்களை அழைத்து கொள்ளையடித்த பொருட்களைத் திரும்பத் தரச் செய்தார்.
"எப்போதும் உன் சிந்தையில் எழும் தேன் சிந்தும் பாடல்களைக் கேட்ட நான் உன் நிந்தனைப் பாக்களையும் கேட்கப் பிரியப்பட்டேன்.
தமிழ் என்றாலே இனிமை. சுந்தரரின் தமிழ் என்றால் இனிமையிலும் இனிமையாக பக்தி ரசம் சொட்டும் என்பதை உலகறியச் செய்யவே இந்த நாடகம்" என்று அப்போது சுந்தரருக்குப் புகழாரம் சூட்டினார் பரமேஸ்வரன்.
சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் ஒரு திருவிளையாடல் நடத்திய திருத்தலம் என்ற பெருமை கொண்டது திருமுருகன் பூண்டி .
சுந்தரரின் தேவாரம் ஒலித்ததால் இத்திருத்தலம் 'பாடல் பெற்ற தலம்' என்ற சிறப்புடன் இன்றும் அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறது.
இறைவனும் இறைவியும்
இத்தலத்தில் உள்ள இறையான சிவனின் பெயர் முருக நாதேஸ்வரர், முருகநாத சுவாமி.
இறைவியின் திருநாமம் ஆவுடை நாயகி, மங்களாம்பிகை, முயங்கு பூண்முலை அம்மன்.
முருகப்பெருமான், அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர்,
அப்பர், சுந்தரர், சேக்கிழார் ஆகியோர் வழிபட்ட சக்தி மிக்க தெய்வங்கள் உறையும் திருத்தலம் திருமுருகன் பூண்டி .
தல விருட்சமும் தீர்த்தங்களும்
துர்வாசர் கற்பக உலகத்திலிருந்து மாதவி (குறுக்கத்தி) மரத்தைக் கொண்டு வந்ததாகப் புராணம் சொல்கிறது. அதனாலேயே இந்த இடத்திற்கு 'மாதவி வனம்' என்ற பெயரும் இருந்திருக்கிறது.
இக்கோயிலின் தல விருட்சம் குறுக்கத்தி (வசந்த மல்லி) மரம். ஆனால் அம்மரம் இப்போது இல்லை. பட்டுப் போய்விட்டது.
பிரம்ம தீர்த்தம், சுப்பிரமணியர் தீர்த்தம், ஞான தீர்த்தம் எனும் முப்பெரும் புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
சுப்பிரமணியர் தீர்த்தம் கோயிலினுள்ளும் மற்ற இரு தீர்த்தங்கள் கோயிலுக்கு வெளியேயும் உள்ளன.
முருகப்பெருமான் பிரம்மஹத்தி தோஷம் குறித்தான தனது மன சஞ்சலத்தைத் தீர்த்துக் கொள்ள பிரம்ம தீர்த்தத்தை உருவாக்கினார்.
கோயிலினுள் தான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்திற்குப் பூஜை செய்ய சுப்பிரமணிய தீர்த்தத்தை நிறுவினார். நிறைவில் முழு ஞானம் கிடைக்கப்பெற்ற மகிழ்வில் ஞான தீர்த்தத்தை அருளினார்.
இவை இத்தீர்த்தங்களை உருவாக்கியது குறித்துப் புராணத் தொடர்பான ஐதீகம் .
இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிணறு போன்றிருக்கும் மூன்று தீர்த்தங்களிலும் தண்ணீர் எடுத்து நீராடி தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டும் வேண்டுவன பெற்று வருவதும் கண்கூடு.
திருத்தலச் சிறப்பு
திருக்கோயிலில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வழிபட்டதன் அடையாளமாக முருகன் சன்னதியில் கருவறையில் மேற்கு நோக்கியவாறு ஒரு சிறிய சிவலிங்கம் உள்ளது. இது முருகன் வணங்கிய ஆத்ம லிங்கம் ஆகும்.
முருகனுடன் எப்போதும் துணை இருக்கும் சக்திமிக்க வேலும் வாகனமான மயிலும் சன்னதியினுள் இல்லை. பதிலாக கோயிலுக்கு வெளியே வேலை நிறுத்தி மயில் வாகனத்தை அருகில் நிற்க வைத்து விட்டு தனித்து இறைவனிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார் முருகப்பெருமான்.
பொதுவாக கோயில்களில் இருக்கும் ஆறுமுகப் பெருமானின் சிலைகளில் முன்பக்கம் மூன்று முகமும் பின்புறம் மூன்று முகமும் இருக்கும். ஆனால் இக்கோயிலில் கொலு வீற்றிருக்கும் முருகப் பெருமானின் ஒரு முகம் மட்டும் பின்புறம் இருக்கும். இதை 'அதோ முகம்' என்பார்கள்.
இந்த முருகப்பெருமானின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
கோயிலில் முருக நாதேஸ்வரர், ஆவுடை நாயகி, முருகப் பெருமான், பவானீஸ்வரர், பைரவர், நவகிரகங்கள், உள்ளிட்ட தெய்வங்கள் கருணை நாடி வருவோருக்கு அருள் தரக் காத்திருக்கின்றனர்.
இக்கோயிலில் பைரவருக்குத் தனிச் சன்னதி உள்ளது. பைரவர் வழிபாடு இக்கோயிலின் சிறப்பம்சங்களில் ஒன்று.
கோயில் நுழைவாயிலில் 16 கால் மண்டபம் உள்ளது. உள்ளே சென்றால் வலப்பக்கத்தில் சிவ வடிவமாகக் காட்சியளிக்கும் வேடுவர் உருவமும், சுந்தரர் இரண்டு உருவங்களிலும் காட்சியளிக்கிறார். ஒன்று மகிழ்ச்சியான முகம்.
இன்னொன்று வாடிய முகம்.
வாடிய முகம் வேடுவர்களால் சுந்தரரின் செல்வம் கொள்ளை அடிக்கப்பட்டபோது இருந்த முகம்.
மகிழ்ச்சியான முகம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இறைவனால் மீட்டுத் தரப்பட்ட போது காட்சி அளித்த முகம்.
கோயில் வெளிப்புறத்தில்
ஆடல் வல்லான் சபை உள்ளது. இது எம்பிரான் பிரம்ம தாண்டவம் ஆடிய பகுதி. இது வணங்க வேண்டிய சபை.
கோயிலின் வெளிப்புறத்தில்
வேப்ப மரத்தடியில் (வேம்படி) ஒரு சதுரக்கல் காணப்படுகிறது. இந்த இடம் முருகப்பெருமான் விட்டுச் சென்ற பிரம்மஹத்தி என்று வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. இங்கு அமர்ந்து அருளும் வினாயகர் பிரம்மஹத்தி வலம்புரி விநாயகர்.
இக்கோயிலில் ஒரு முனிவரின் சிலை உள்ளது. அது முருகனைப் பாடி முக்தி பெற்ற அருணகிரிநாதர் என்கிறது பழமையான நூல். ஆனால் சிலை அமைப்பைப் பார்க்கும் போது அகத்திய பெருமான் போன்றும் இருக்கிறது.
காரணம், இத்தலத்தில் அகத்தியர் முருகனுக்கு பிரமை நிவர்த்தி யாகம் செய்து 'மெய்யுணர்வுக் கோவை' என்ற பதிகம் பாடியுள்ளார்.
சுப்பிரமணியர் தீர்த்தம் அருகே ஆஞ்சநேயர் அருளாசி தந்து கொண்டிருக்கிறார். வராஹி அம்மன் அம்பாள் சன்னதியின் வெளிப்புறச் சுவரில் அருள் பாலிக்கிறாள்.
கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான நுழைவுக் கோபுரம் இல்லை. கருங்கல் தீப ஸ்தம்பமே உள்ளது.
தீர்த்த மகிமை
சூரசம்ஹாரம் செய்துவிட்டுத் திருமுருகன் பூண்டி வந்த முருகப்பெருமான் இங்கு தனது தெய்வாம்ச வேலைத் தரையில் செலுத்தி நீர்வரச் செய்து தீர்த்தம் அமைத்தாராம். அந்நீரைப் பருகிய பின்னரே முருகனுக்கு இருந்த பிரம்மஹத்தி தொடர்பான சஞ்சலம் நீங்கியதாம். அத்தீர்த்தமே பிரம்ம தீர்த்தம்.
முற்காலத்தில் மகாரதன் என்ற பாண்டிய மன்னன் சுப்பிரமணியர் தீர்த்தத்தில் நீராடி அந்நீரைக் கொண்டு பாயசம் செய்து பசும்பால் கற்கண்டு சேர்த்து சுவாமிக்கு நைவேத்தியம் படைத்து அந்தணர்களுக்குத் தானம் செய்து பிரார்த்தனை செய்தான்.
பிரார்த்தனையின் பலனால் அவனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகக் கூறுகிறார்கள்.
ஒரு காலத்தில் திருமுருகன் பூண்டியில் 27 தீர்த்தங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அருகில் ஓடும் நொய்யல் ஆறும் ஒரு தீர்த்தமாகக் கருதப்படுகிறது.
பிரார்த்தனை முறைகளும் பலன்களும்
சுந்தரமூர்த்தி நாயனார் இழந்த செல்வத்தை மீட்டுக் கொடுத்த சிவத்தலம் என்பதால் திருடப்பட்ட பொருட்களையும் இழந்த செல்வங்களையும் மீட்டுப் பெற இத்தலத்தில் பிரார்த்தனை மேற்கொண்டால் இழந்தவை கிட்டும்.
சிவமைந்தன் முருகப்பெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற திருத்தலம் என்பதால் இத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை செய்து வந்தால்
தோஷங்களும் பாவங்களும் நீங்கும்.
சித்தபிரமை, பைத்தியம் போன்ற கர்ம வினைகளிலும், பில்லி சூனியத்தால்
நிலைகுலைந்தவர்களும் பிரச்சினைகளில் இருந்து விடுபட இத்திருத்தலம் பேரருள் வழங்குகிறது.
48 நாட்கள் இங்கேயே தங்கி
பிரம்ம தீர்த்தத்திலோ, சுப்பிரமணியர் தீர்த்தத்திலோ தீர்த்தமாடி இறைவனை வழிபட்டு பைத்தியம், சித்த பிரமை குணப்படுத்திக் கொள்ளும் பழக்கம் அண்மைக் காலம் வரை இருந்தது. சித்தபிரமை பிடித்தவர்களை அந்நாட்களில் சங்கிலியால் கட்டியிருப்பார்கள். அந்த நடைமுறைகள் இப்போது இல்லை.
இப்போது தீர்த்தங்களாடி ஆறுமுகமாகக் காட்சியளிக்கும் இறையருளின் ஆறாவது முகத்தைத்
தீபாராதனையின் போது தரிசித்துக் குணமடைகிறார்கள் பக்தர்கள்.
திருமுருகன் அருள் நிறைந்த சுப்பிரமணிய தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வணங்கி வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்னும் தல மகிமை கொண்டது இத்திருக்கோயில்.
இத்தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் குஷ்டரோகம் முதலான கொடிய நோய்கள் விட்டு அகன்று விடும். ஆணவம மலம் நீங்கி மோட்சம் கிட்டும் என்று தலபுராணம் உறுதியளிக்கிறது.
கூப்பிடு விநாயகர் கோயில்
கோயில் அருகில் சுந்தரரிடம் வேடுபரி (கொள்ளை) நடந்த இடமான விநாயகர் சன்னதி உள்ளது. 'கூப்பிடு விநாயகர் கோயில்' என்பது பெயர்.
ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும்
இக்கோயிலையும் விநாயகர் பெருமானையும் தரிசிப்பதே கோடி புண்ணியம்.
இவ்விடத்தில் இருந்து விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு களவாடியவர் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் பெயரே 'கூப்பிடு விநாயகர்' என்று ஆகி உள்ளது.
திருவிழாக்கள்
மாசி மாதத்தில் நடைபெறும் 'வேடுபரி உற்சவம்', மாசி மகம், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழா,தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, அன்னாபிஷேகம், மஹா சிவராத்திரி முதலானவை முக்கிய திருவிழாக்கள்.
சுவாமிக்குப் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
மாதவனேஸ்வரர் ஆலயம்
திருமுருகன் பூண்டிக்குச் சென்று இறைவனைத் தரிசிப்பவர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஒரு திருத்தலம் அருகிலேயே உள்ளது.
இங்கு வழிபட்டால் கயிலை மலையில் தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
மாதவனேஸ்வரர் கோயிலே ஆதி கோயில். திருமுருகன்பூண்டி திருக்கோயிலின் அசல் கோயில்.
மாலாதரன் என்ற வேட மன்னன் வழிபட்ட தலம். இங்கு சுயம்புலிங்கமாக இறைவன் காட்சியளிக்கிறார். கோயில் முன்பு பெரிய நந்தீஸ்வரர் சுதைச் சிற்பம் உள்ளது.
ஒரு முனிவரின் சாபத்துக்கு உள்ளான துர்வாசர் இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி நீராடி பிரார்த்தனை மேற்கொண்ட பின் சாபம் நீங்கப் பெற்றதாக தகவல் உள்ளது. இது 'துர்வாசர் தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் அடர் முல்லை வனத்தில் இருந்த இக்கோயிலின் தலவிருட்சம் முல்லை. தற்போது 'மாவிலிங்கம்' இத்தலத்தின் விருட்சமாய் உயர்ந்து நிற்கிறது.
இது ஒரு சக்தி வாய்ந்த கேது பரிகார தலம்.
ஒரு சமயம் ஒரு முனிவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து தங்கி சிவனைப் பூஜித்து சாபம் நீங்க பெற்றதுடன் இறைவனின் அனுகிரகத்தால் நவக்கிரக பதவியும் பெற்றார்.
இக்கோயிலின் கோபுரச் சிற்பங்கள் பல புராண நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம் அழகுற அமைந்துள்ளன.
முருகப்பெருமான் வழிபாடு செய்வது, சுந்தரர் வழிபாடு செய்வது, மகா ரத பாண்டியன் பிள்ளைப் பேறு வேண்டி வணங்கி நிற்பது, வேடுபரி காட்சி,கேது பகவான் பூஜை செய்வது , துர்வாசர் வணங்கி நிற்பது, இறையனாரின் பிரம்ம தாண்டவக் காட்சி, சிவபிரானுக்குப் பசு பால் சொரியும் திருக்காட்சி முதலான சிற்பங்கள் கோபுரத்தில் வணங்கி வழிபட வடிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுகள்
திருமுருகன் பூண்டி கோயிலின் அருமைகளையும் பெருமைகளையும் குறிப்புகளையும் பறைசாற்றும் வண்ணம் வீர ராஜேந்திரன்,கோனேரின்மை கொண்டான், குலோத்துங்கச் சோழ தேவன், விக்கிரம சோழ தேவன்,
வீர நஞ்சை ராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.
நந்தி தேவாரம்
ஸ்ரீ நந்தியெம்பெருமான் 'நந்தி ஜீவநாடி' மூலம் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடத்தின் சுவாமி சித்தகுருஜி வாயிலாக அருளியுள்ள நந்தி தேவாரம்.
வேடரிடம் சுந்தரர்க்கு மிக்கபொருள் பறிபோக
பாடலினால் பரமனை பழிகூறி வினாத் தொடுக்க
காடடரும் முருகன் பூண்டியிலே அமர்ந்தருளும்
ஆட அதிர கணம் சூழ அவையாவும் கையளித்த
வீடருளும் எம்பெருமான் மென்பாதம் பற்றியவர்
தேடவரும் செல்வமொடு சிவபதமும் சேர்வாரே.
கோயில் அமைவிடம்
திருப்பூர் அவிநாசியப்பர் கோயிலில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் திருமுருகன் பூண்டி உள்ளது.
திருமுருகநாத சுவாமி ஆலயம்,
திருமுருகன் பூண்டி, அவிநாசி -641652
தமிழ்நாடு.
அருகில் இருக்கும் விமான நிலையம் மற்றும் இரயில் நிலையம்
கோவை விமான நிலையம்
திருப்பூர் இரயில் நிலையம்
பயணக் குறிப்பு
கொங்கு ஏழு தலங்களும் கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்ட எல்லைக்குள் மொத்தமாக 130 கிலோ மீட்டர் பயண தூரத்தில் அமைந்துள்ளன.
சரியாகத் திட்டமிட்டு வந்தால் 2 தினங்களில் கொங்கு ஏழு தேவாரத் திருத்தலங்களையும் தரிசித்த பாக்கியம் பெறலாம்.
கூகுள் மேப் வழிகாட்டி
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஓம் நமசிவாய 🙏
அற்புதமான பணி. மாரி மைந்தன் ஐயா அவர்களுக்கு எம் ஐயனின் பரிபூரண ஆசிகள் கிடைக்க எம்பெருமானின் திருவடிகளை ஏத்துகிறேன்.
ReplyDelete