அவிநாசி

மாரிமைந்தன்
சிவராமன்
  

பாடல் பெற்ற தலங்கள்-1

அவிநாசி

திருப்புக்கொளியூர்

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானின் தொண்டர் மட்டுமல்ல, நாயனாரும் கூட. இறையனார் சிவபிரானின் பிரியமான தோழர் எனும் பாக்கியம் பெற்றவர்.

சிவாலயங்கள் தோறும் சென்று அங்கு வீற்றிருக்கும் அம்மையப்பனை வணங்கி அழகுத் தமிழில் அமுதப் பாடல்கள் பாடுவது அவரது சிவத்தொண்டு.

ஒருமுறை சுந்தரர் கொங்கு நாட்டில் பயணம் செய்தார். அதுபோது 'திருப்புக்கொளியூர்' என்ற ஊரில் உள்ள சிவாலயம் செல்ல விழைந்தார்.

கோயிலுக்கு அந்தணர்கள் வாழும் அக்ரகாரம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு வீடு அமர்க்களமாக இருந்தது. இன்னிசை முழங்க வீடு களை கட்டியிருந்தது. வீட்டிற்கு வெளியே ஆட்டமும் பாட்டமும் அதிகம் இருந்தது.

அதேசமயம் எதிர் வீடு சோகமயமாய்க் காணப்பட்டது. அடிக்கடி விசும்பலும் கதறலும் வெளியே வீதியில் சென்று கொண்டிருந்த சுந்தரருக்குக் கேட்டது.

இந்த வித்தியாசச் சூழல் சுந்தரருக்கு புதிது. எனவே விசாரித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அத்தெருச் சிறுவர்கள் ஏரிப் பக்கம் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது திடீரெனக் கரைக்கு வந்த  முதலை ஒரு சிறுவனைக் கவ்விக்கொண்டு போய்விட்டது.

அந்த சிறுவன் வீட்டில் தான் சோகம் அப்பிக்கொண்டிருக்கிறது. காரணம், அன்று எதிர் வீட்டுச் சிறுவனுக்குப் பூணூல் கல்யாணம். தங்கள் மகன் உயிரோடு இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் திருமணம் நடத்தி இருக்கலாமே என்று எண்ணித்தான் மகனை இழந்த பெற்றோர் அழுது கொண்டிருக்கிறார்கள்.

இதைக் கேள்விப்பட்ட சுந்தரர் கவலை கொண்டு நேரே சிவாலயம் சென்று முதலை உண்ட பாலகனை மீட்டுத் தர இறைவனை வேண்டினார். இறைவனே கனிந்துருகும் வண்ணம் பதிகம் பாடினார்.

சுந்தரர் கருணை மனத்தால் பக்தித் திறனால் பாடிய பாடலுக்குச் செவி சாய்த்த இறையனார், உண்ட பாலகனை உயிரோடு உமிழ்ந்து தர முதலைக்கு ஆணையிட்டார்.

அக்கணமே வறண்டிருந்த ஏரியில் நீர் நிரம்பியது. உற்சாகத்தோடு முதலை கரைக்கு வந்தது. இறைவனின் ஆணைப்படி முன்பு உண்ட பாலகனைத் தன் வாயினின்று உயிரோடு வெளித்தள்ளியது.

எப்படித் தெரியுமா?

சிறுவனை முதலை உண்ட போது பாலகனின் வயது நான்கு. மூன்று
ஆண்டுகள் கழித்தே சுந்தரர் அப்பாலகனை மீட்க இறைவனிடம் பதிகம் பாடினார். அப்போது முதலை வாயிலிருந்து  உயிரோடு வெளிவந்த பாலகனின் வயது ஏழு ஆகியிருக்கும் என்பதால் ஏழு வயதுச் சிறுவனாகவே உயிர்ப்பித்துத் தந்தார் கருணாமூர்த்தி. 


துள்ளிக் குதித்தபடி குதூகலமாக வந்த பாலகனை ஆரத்தழுவியபடி ஆனந்தக் கண்ணீரோடு பெற்றோர் சுந்தரர் திருவடி விழ, அவர்களை அழைத்துக் கொண்டு கோயிலில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஆண்டவரைத் தொழுது மகிழ்ந்தார் சுந்தரர்.

முதலை வாயில் சென்றவரை உயிர்ப்பிக்கும் அருளாற்றல் கொண்ட சிவபிரான் எமன் வாயில் சென்றவரையும், செல்ல இருப்பவரையும் காப்பார் என்பதே இப்புராணம் வலியுறுத்தும் நம்பிக்கைக் கதை.

இச்சம்பவம் நடந்த திருப்புக்கொளியூரின் இன்றைய பெயர் அவிநாசி. இறைவனின் திருநாமம் அவிநாசியப்பர்.

இன்னும் இரண்டு புராணக் கதைகள் உண்டு. அவற்றையும் கேளுங்கள்.

ஒரு சமயம் வசிஷ்ட முனிவருக்கு சனி தோஷம் ஏற்பட்டது. சனி தோஷம் நீங்க உகந்த கோயில் எது என அறிய தவத்தில் ஆழ்ந்தார்.

தவத்தில் வந்தது அவிநாசியப்பர் ஆலயம்.

ஆம்...வசிஷ்ட முனியின் தவம் சுட்டிக்காட்டிய திருத்தலம் அவிநாசிநாதர் வீற்றிருக்கும் ஆலயம்.

அவிநாசிக்கு வந்து அவிநாசியப்பரை வழிபட்டு வசிஷ்டர் சனி தோஷம் நீங்கப் பெற்றதாகப் புராணம் சொல்கிறது.

அவிநாசியப்பர் திருக்கோயிலில் சனீஸ்வரர் சன்னதியில் வசிஷ்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சனி பகவான் இன்றும் நாடி வரும் பக்தர்களின் சனி தோஷத்தை நீக்கி வருகிறார்.

ஒருமுறை பதஞ்சலி முனிவர் காசிக்கு நிகரான கோயில் எது என்று பரமேஸ்வரனிடம் கேட்டார். இறைவன், வினாவை பதஞ்சலியார் முடிப்பதற்குள் 'அவிநாசி' என்று விரைந்து பதிலளித்தார்.

வியந்து நோக்கிய பதஞ்சலியாரை அவிநாசி குளத்தில் மூழ்கிக் குளிக்கும் போது தண்டத்தை விட்டுவிடச் சொன்னார்.

தண்டத்தை மீண்டும் பெற ஈஸ்வரனிடம் பதஞ்சலியார் கேட்டபோது காசிக்குச் செல்லச் சொன்னார்.

காசியில் கங்கையில் குளிக்கும் போது அந்தத் தண்டம் 
பதஞ்சலியாரின் கரங்களுக்குக் கிட்டியது.

இதன் காரணமாக அவிநாசிக்கு 'தட்சிண வாரணாசி' என்ற பெயர் உண்டு. 'காசியில் வாசி அவிநாசி' என்றும் சிறப்பித்துக் கூறுவர் சமயச்  சான்றோர்.

அவிநாசியப்பர் கோயிலில் இருக்கும் அவிநாசியப்பர்,
பைரவர், காசி தீர்த்தம் முதலானவை காசியில் இருந்து கொண்டுவரப்பட்டவை.

காசியில் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அத்தனையும் அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டாலும் கிடைக்கும் என்பதே இப் புராணச் சம்பவம் சொல்லும் தலச்சிறப்பு.

எங்கே, அவிநாசிக்குப் புறப்பட்டு விட்டீர்களா?

திருப்பூர் மாவட்டத்திலும், கோயம்புத்தூருக்கும் ஈரோட்டிற்கும் அருகிலும் இருக்கிறது அவிநாசி.

கண்டிப்பாகச் சென்று இறையருள் பெற்று வாருங்கள்!

பெயர்க்காரணம்

திருப்புக்கொளியூர்

திருப்புக்கொளியூர் என்ற பழமையான பெயரும் ஒரு காரணப் பெயர்தான்.

ஒரு சமயம் சிவபிரான் அக்னித் தாண்டவம் செய்தபோது பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலான தேவாதி தேவர்கள் அஞ்சி நடுங்கி இங்கு வந்து 'புகுந்து ஒளிந்த காரணத்தால் புக்கொளியூர் எனப் பெயர் வந்திருக்கிறது. பஞ்ச தாண்டவத் தலங்களில் அவிநாசியப்பர் கோவில் ஒன்றாக விளங்குகிறது.

அவிநாசி

'விநாசம்' என்றால் அழியக் கூடியது என்று பொருள். 'அவிநாசி' என்றால் அழியாத் தன்மை கொண்டது என்று அர்த்தம். அழியாத தன்மை கொண்ட இறைவன் பெயரே இந்த ஊருக்கும் அவிநாசி என்று பெயராய் அமைந்தது சிறப்பு.

அவிநாசியப்பரை பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனின் ஐராவதம் என்னும் வெள்ளை யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக்கன்னி 21 மாதங்களும் வழிபட்டு இறையருள் பெற்றார்கள். 

படைக்கும் கடவுளான பிரம்மா வணங்கி வழிபட்டதால் அவிநாசியப்பருக்கு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

அவிநாசியப்பருக்கு அவிநாசி நாதர், அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசி ஈஸ்வரர், பெருங்கேடிலியப்பர் என்ற திருநாமங்களும் உள்ளன.

அவிநாசியப்பரைப் பாடிய புலவர்கள்

சுந்தரர் தவிர மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரும் இத்தல இறைவனைப் புகழ்ந்து பாடி வணங்கியுள்ளனர்.

மாணிக்கவாசகர் இத்தலத்திற்கு வராமலேயே மதுரையில் இருந்தபடியே 'அரிய பொருளே அவிநாசியப்பா பாண்டி வெள்ளமே' என்று பாடியுள்ளார். அப்பர் திருத்தாண்டகத்தில் 'அவிநாசி கண்டாய் அண்டம்தான் கண்டாய்' எனப் பாடுகிறார்.

திருமூலரின் திருமந்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ், மாணிக்கவாசகரின் திருவாசகம் முதலானவற்றில் இத்தலப் பெயர்கள் சில இடங்களில் இடம் பெற்றுள்ளன.

2000 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அவிநாசியப்பர் சுயம்புலிங்கமாக விளங்குகிறார்.

இறைவியர்

இறைவியின் பெயர் கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி. இத்தலத்தில் இரண்டு அம்மன்கள் உள்ளனர். தவநிலையில் தலவிருட்சமான பாதிரி மரத்தடியிலும், கோயிலின் உட்பிரகாரத்தில் தனிச் சன்னதியிலும் அன்னை உறைகின்றாள்.

அவிநாசியப்பருக்கு வலது புறம் கருணாம்பிகை அம்பாளின் கோயில் உள்ளது.  இப்படி வலது புறம் அம்மன் இருப்பது மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பு.

இந்த வலப்புறச் சிறப்புக்கு ஒரு சுவாரசியமான புராணம் உண்டு.

சிவபிரான் அக்னி தாண்டவம் ஆடிய போது பார்வதி தேவி ஜுவாலையின் வெம்மையைத் தாங்க முடியாமல் ஒரு சில நொடிகள் இறைவனை விட்டு விலகி இருக்க நேர்ந்தது. இனி ஒரு நொடிப் பொழுது கூட மாதொருபாகனை விட்டு விலகாது இருக்க விரும்பிய பார்வதி இறைவனிடமே அதற்கொரு வழியைக் கேட்டார்.

அப்போது சிவபிரான் தேவர்கள் தன் அக்னி தாண்டவத்தின் போது புகுந்து ஒளிந்த நிகழ்வைக் கூறி அவிநாசியப்பர் ஆலயமே  தவமிருந்து வரம் பெற்று ஒரு நொடியும் எனை விலகாதிருக் உகந்த ஆலயம் எனச் சொன்னார்.

பூலோகம் வந்தடைந்த பார்வதி தேவி அவிநாசி ஆலயத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வலது புறத்தில்  பாதிரி மரத்தடியில் கடும் தவம் மேற்கொண்டு கேட்ட வரம் பெற்றாள்.

அந்தப் பாதிரி மரத்து அம்மனே 'பாதிரி மரத்தம்மன்' என்று திருப்பெயரோடு அவிநாசியப்பருக்கு வலப்புறத்தில் வீற்று  இன்றும் அருள் பாலித்து வருகிறாள்.


அதிசயத் தலவிருட்சம்

தலவிருட்சம் பாதிரி மரம் (மா மரம்). இத்தலத்தில் உள்ள பாதிரி மரத்தில் பூக்கள் பிரம்மோற்சவ காலத்தில் மட்டுமே பூக்கின்றன. மற்ற காலங்களில் பூப்பதில்லை என்பது பேரதிசயம். தலவிருட்சமே இறைவனை  இத்தனை அர்ப்பணிப்புடன் பூஜிக்கிறதாம்.

'பாதிரிப் பூ வாடிவிடும். புதிதான பானையும் உடைந்து விடும். ஆனால் பாதிரிப் பூக்களின் நறுமணம் மட்டும் அழியாது' என்று நீலகேசி குண்டலகேசியிடம் வாதிட்டதாக இலக்கியத்தில் உள்ளது.

மிக நறுமணம் மிக்க பாதிரிப் பூக்களைப் பூக்குவிக்கும் பாதிரி மரம் தலவிருட்சமாக திருப்பாதிரிப்புலியூர், திருவலிதாயம், திரு ஆதனூர், திருநாகை ஆகிய தலங்களில் உள்ளன.

பார்வதி தேவி தவம் இயற்றியதால் காசியில் இருந்து தோன்றிய வேர் நீண்டு அவிநாசியில் சுயம்புலிங்கமாக வெளிப்பட்டதாக ஐதீகம்.

தீர்த்தம்

காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதம் தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள்  உள்ளன.

அருள் தரும் சன்னதிகள்

கோயிலில் உள்ள சிற்பங்கள் மிக நேர்த்தியானவை. அருட்செறிவு மிக்கவை. சிற்பக் கலைக்குக் கட்டியும் கூறுபவை.

அவிநாசியப்பர் ஆலயத்தில் 32 கணபதிகள் வழிபடுவதற்கு உள்ளன. நர்த்தன கணபதி முன்பு மூஞ்சூறு வாகனத்திற்குப் பதிலாக சிம்ம வாகனம் அமைந்துள்ளது சிறப்பு.

சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் அறுகோண அமைப்பிலான சன்னதியில் முருகன் சன்னதி உள்ளது. இது சோமாஸ் கந்த வடிவம். ஆழ்ந்த முருக வழிபாட்டிற்கு உகந்த திருப்புகழ் கோயில்  இது.

இங்குள்ள கால பைரவர் காசி பைரவருக்கும் முற்பட்டவர். சிவனுக்கும் அம்மனுக்கும் அடுத்தபடியாக இத்தலத்தில் சிறப்புப் பெற்றவர் பைரவரே.


தட்சிணாமூர்த்திக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் காட்சியளிக்கிறார். இம் மாமுனி தட்சிணாமூர்த்தியை விடச் சக்தி மிக்கவர். குருவின் குரு என்று வணங்கப்படுகிறார்.


சிவாலயங்களில் சிவனுக்குப் பின்புறம் அருள் பாலிக்கும் விஷ்ணு பகவான் இத்தலத்தில் கொடி மரத்தில் சிவனைப் பார்த்தபடி அருளாட்சி செய்கிறார்.

இங்கு சிவன் கோவில் முன்பும் அம்மன் கோவில் முன்பும் தனித்தனி கொடி மரங்கள் உள்ளன. கொடி மரத்தில் முதலை உண்ட பாலகன் சிற்பம் உள்ளது.

கோயில் நுழைவாயிலில் ஆஞ்சநேயருக்குத் தனிச் சன்னதி உள்ளது. எதிரே தலைகீழாக வாளரம் இறங்குவது போல் புடைப்புச் சிற்பம் உள்ளது.

நாயன்மார்கள் சன்னதியில் 63 நாயன்மார்களுடன் விநாயகர் உள்ளார். பிரம்மா, விஸ்வநாதர், விசாலாட்சி ஆகிய தெய்வங்களும் உள்ளனர்.

தேரோட்டம்

தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய தேர்களில் ஒன்று அவிநாசியப்பர் தேர். மிகுந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தேரைப் பார்ப்பதே கோடி புண்ணியம்.


இங்கு நடக்கும் தேர்த் திருவிழா மிகப் பிரசித்தம்.

பிரார்த்தனைகளும் பலன்களும்

சிவபிரானுக்கு 'ஆசுதோசன்' என்ற பெயர் உண்டு. ஆசுதோசன் என்றால் எளிதில் அருள் தரக்கூடியவன் என்று பொருள்.
அவிநாசியப்பர் அப்படிப்பட்ட இறைவன்.

தியானம், பூஜை முறை, மந்திரம் என எதுவும் அறியாத எளிய பக்தர்கள் கூட மனம் உருகி அவிநாசியப்பரிடம் எளிமையான வழிபாடு செய்தாலே போதும். நல்லருள் வழங்குவார்.

வியாதவேடர் என்ற திருடன் மனம் திருந்தி மனம் உருகி வேண்டியதால் அவனுக்கு முக்தி தந்து கோயிலினுள் தனிச் சன்னதியே அமைத்துத் தந்துள்ளார் அவிநாசியப்பர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆயிரம் ஆண்டுகள் பாதிரி மரத்தின் கீழ அமர்ந்து பார்வதி தேவி தவம் இயற்றியதால் இம்மரத்தை 'ஓம் நமசிவாய' என்று சொல்லிய வண்ணம் வலம் வந்தால் பாவ தோசம் நீங்கும் என்பது சிவ பக்தர்களின் நீண்ட கால நம்பிக்கை.

மைசூர் மகாராஜா வம்சத்தினர் அரச பதவி ஏற்கும் போது நேராக காசிக்குச் சென்று காசியில் இருந்து பூஜை செய்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு அவிநாசியப்பர் கோயிலுக்கு வந்து பூஜை செய்த பின்னரே அரண்மனைக்குக் கொண்டு செல்வர். திறமையான நிர்வாகத்தை நடத்துவதற்கு அருள் தர வல்லவர் அவிநாசியப்பர்.

திருக்கோயிலைச் சுற்றி வரும் போது உட்பிரகாரச் சுவர்களில் கை வைத்து பிரார்த்தனை செய்து கொண்டால் தோல் நோய் குணமாகும். 

இராகு காலத்தில் கருணாம்பிகைக்கு விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.

அம்பாள் சன்னதியின் பின்பக்கத்து மாடத்தில் உள்ள தேளின் உருவத்திற்கு விளக்கேற்றி வழிபட்டால் கனவிலோ நேரிலோ விஷ ஜந்துக்கள் வந்து தொந்தரவு செய்யாது. தேள் கடிக்கும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய இடம்.

தலத்தில் உள்ள பைரவருக்கு அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி திதியில் வடைமாலை சாற்றி வழிபட்டால் எதிரி பயம், வழக்கு விவகாரம் போன்றவற்றில் நற்பலன்கள் கிடைக்கும். ஞாயிறு ராகு காலத்தில் தேங்காய், எலுமிச்சை, பூசணியில் குங்குமம் தடவி விளக்கேற்றி செவ்வரளி அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள்.

திருவிழாக்கள்

சித்திரைப் பூரத்தில் தேர்த் திருவிழா. அதுபோது 63 நாயன்மார்களுக்கும் இறைவன் ரிஷபருடன் காட்சி அளிப்பதாக ஐதீகம்.

பங்குனி உத்திரம் அன்று அவிநாசியப்பர் முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் மிகப் பிரமாண்டமாக நடக்கும்.

அருகில் இருக்கும் திருத்தலங்கள்

திருக்கோயிலுக்குச் சற்று அருகில் தாமரைக் குளம் என்ற ஏரி உள்ளது. .அங்கு உள்ள சுந்தரர் கோயில், முதலை வாய்ப்பிள்ளை சிற்பம், புராணம் நிகழ்ந்த ஏரி முதலானவை நற்பலன் வேண்டும் பிரார்த்தனைக்கு உரியன.


அருகில் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி உள்ளது. அவிநாசியப்பர் கோயிலுக்கு வருபவர்கள் திட்டமிட்டு இங்கேயும் ஒரே நாளில் சென்று வரலாம்.

அவிநாசியப்பர் திருக்கோயிலின் வைப்புத் தலங்களான சேவூரும், மொக்கணீசுரமும் சிவ பக்தர்களின் மனத்திற்கு அமைதி அளிக்கக்கூடிய திருத்தலங்கள்.

நந்தி தேவாரம்

ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடத்தின் சத்குரு சுவாமி சித்தகுருஜி வாயிலாக நந்தி ஜீவநாடி அருளிய எளிய 'நந்தி தேவாரம்'  அவிநாசியப்பரின் கீர்த்தியை அழகாகச் சொல்கிறது

அந் நாள் ஒருமுதலை 
 சிறுபிள்ளை வாய்கக்க
முன் நாள் பதஞ்சலிக்கு
  கங்கைதனில் ஈய்ந்த
என் ஆள் அவிநாசி
  அப்பன்தாள் பற்ற
பன் நாள் செய்பாபம் 
  பொடியாகி போமாமே
                              - நந்தி தேவாரம்.

திருச்சிற்றம்பலம்.

கூகிள் மேப் வழிகாட்டி


அருகிலுள்ள விமான நிலையம் மற்றும் இரயில் நிலையம்

கோவை விமான நிலையம் , திருப்பூர் இரயில் நிலையம்

இப்பதிவை ஆங்கிலத்தில் படிக்க:
(For reading this post in English)



Comments

  1. குமார், சேலம்4 June 2025 at 22:40

    மாரி மைந்தன் ஐயா அவர்களின் இந்த சிவத்தொண்டு மென்மேலும் சிறக்க எங்கும் நிறை பரம்பொருளை இறைஞ்சுகின்றேன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமுருகன் பூண்டி